திரட்டிகள்: தமிழ்மணம் | தேன்கூடு | தமிழ்ப் பதிவுகள்

தசாவதாரம் படத்தின் முதல் காட்சியில், ஒரு பட்டாம் பூச்சி பறந்து போகிற பின்னணியில் கேயாஸ் தத்துவத்தைப் பற்றி கமல் சில வார்த்தைகள் சொல்வார். படத்தின் கதை, இந்தத் தத்துவத்தின் பின்னணியிலே பின்னப்பட்டிருக்கிறது.

சரி. அது என்ன கேயாஸ் தத்துவம்?

கேயாஸ் கட்டமைப்பி்ல் (chaos system) ஏற்படும் ஒரு சிறிய மாற்றம் கூட கால ஓட்டத்தில் கணிக்க முடியாத பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடும். கவித்துவமாய் சொல்வதானால் 'பட்டாம் பூச்சி விளைவு' (Butterfly Effect); ஒரு பட்டாம் பூச்சியின் சிறகசைவு வளி மண்டலத்தில் ஏற்படுத்தும் சிறு மாற்றம் கூட காலப் பெருவெளியில் ஒரு சூறாவளியை ஏற்படக் காரணமாக இருக்கக்கூடும்.

உதாரணத்திற்கு ஒரு மலை உச்சியில் இருந்து ஒரு பந்து உருள்கிறது என்று என்று வைத்துக் கொள்வோம். மலை உச்சியில் பந்து எந்த இடத்தில் இருக்கின்றது என்ற சிறிய வேறுபாட்டைப் பொருத்து பந்து உருளும் பாதையும் மாறுபடும் அல்லவா?

"12B" (Original: Run lola Run) படத்தில் கதாநாயகன் ஒரு பேருந்தை தவறவிட்டதால் என்னவாக ஆகிறார் என்றும், ஒருவேளை அந்தப் பேருந்தை பிடித்திருந்தால் என்னவாக ஆகியிருப்பார் என்றும் கதைத்திருப்பார்கள். பேருந்தை தவறவிடுவதற்கும் பிடிப்பதற்குமான அந்த ஒரு நொடி அவன் வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது என்பது மாதிரி...

ஒருவேளை மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் நிறவெறியர்களால் இரயிலில் இருந்து வெளியேற்றப்படாமல் இருந்திருந்தால்...

இதுமாதிரியான சிறிய நிகழ்வுகள் காலப் பயணத்தில் உண்டாக்கும் கணிக்க முடியாத விளைவுகள் பற்றியது.

இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புவர்களுக்காக ...
http://en.wikipedia.org/wiki/Butterfly_effect

சரி, தசாவதாரத்திற்கு வருவோம் ...

படத்திற்கு சம்பந்தம் இல்லாததாக தோன்றும், 12ம் நூற்றாண்டில் நடந்ததாக காட்டப்படும் காட்சியில் சைவர்களுக்கும், வைணவர்களும் இடையில் நடக்கும் ' யார் பெரியவர்' என்ற மோதலில் 2ம் குலோத்துங்க சோழனால் தில்லை திருமாலின் சிலை கடலில் வீசப்படுகிறது. கடலில் வீசப்படும் அந்த சிலை (அ) கல் கடல் என்னும் கேயாஸ் கட்டமைப்பில் ஏற்படுத்திய சிறிய மாற்றத்தின் தொடர் விளைவுகளே 2004ல் சுனாமியை வரவழைத்திருப்பதாக பின்னப்பட்டிருக்கிறது.

மற்றபடி 2004ல் அமெரிக்க விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்படும் கிருமியினால் (Bioweapons) மடியப் போகும் பல கோடி மக்களைக் காப்பாற்ற வேண்டி சுனாமியை வரவழைப்பதற்காகவே 12ம் நூற்றாண்டில் கடலுக்குள் திருமால் சிலை சென்றதாக நினைப்பவர்கள் 'காரணமும் விளைவும்' (Law of Cause and Effect) தத்துவத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

இது என்ன இன்னொரு தத்துவமா என்று கேட்பவர்களுக்காக ... சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் உங்கள் பூனை மாடியில் இருந்து விழுந்து இறந்து விட்டால், நீங்கள் புவியீர்ப்பு விசையை சபிப்பீர்களா? ...Explains how things happen, but not why.